~ வன்னியூர் செந்தூரன் எழுதி எம்மை அழித்தது யார்..?

செங்குருதி கொதித்தோடிய மகாநதியே–நீ
செவியிழந்து மௌனித்த மாயமென்ன..?
தங்கமொழி தவழ்ந்தாடிய தாயகமண்ணே–நீ
மங்கலமிழந்து மரணித்திருக்கும் நியாயமென்ன.?

உடலை அணுவாக்கி உயிரை உடைத்தெறிந்த
உன்னத ஓர்மத்தீயிலெழுந்த அக்கினிச்சுடர்களே
வல்லவன் வழிநடந்த வையகத்தின் புதையல்களே
விதியை வெல்லவொரு வழியைச்சொல்லிப்போங்கள்.

சோறிழந்த வயிறோடு நாடுதேடிய ஒருகூட்டம்
நாடிழந்த வலியோடு சோரம்போகா மறுகூட்டம்
சோராமல் ஏமாற்றி வாழும் கோமாளிகள் கூட்டம்
கோமாளிகளுக்கு குடைபிடிக்கும் ஏமாளிகள்கூட்டம்

அத்தனை நாடுகளும் தான் எமை அழித்ததென
எத்தனைதரம் சொன்னாலும் அர்த்தப்படாது
தமிழனே தன்தலையில் மண்ணிட்டு தாழ்ந்துவிட்டான்
தலைவிதியைமாற்றும் மணிமுடியைத் தவறவிட்டான்

என்னைப்பொறுத்தவரை எங்கள்ஆண்டவன்
எம்மை ஆண்டவன் எப்போதும் நேரானவன்
இனியவொரு போகத்தைத் தவறவிட்ட நாம்
இடிவிழுந்த பாலையில் ஒளியிழந்த பூச்சிகள் தான்.

ஆக்கம் ~ வன்னியூர் செந்தூரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக