கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு இரண்டாம் மாடிக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவு

வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளதால் தாம் பெரும் அச்சத்தில் வாழ்வதாகவும், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதால் தானும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினா் அழைப்பாணை விடுத்துள்ளனா்.
இந்நிலையில் தான் பெரும் அச்சத்தினை எதிர்நோக்கிவருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப் கேணல் கலையழகனின் மனைவியை விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும்,
கலையழகன் பயன்படுத்திய கைத்துப்பாக்கிய தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயா் தமிழா்களுடன் தொடா்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள்பயங்கரவாத தடுப்பு பிரிவினா் விசாரித்துள்ளனா்.
இந்த நிலையில் நேற்று அவரது விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினா் 15-09-2016 அன்று கொழும்பு இரண்டாம் மாடிக்கு வாக்கு மூலம் ஒன்று அளிப்பதற்காக வருகை தருமாறு அழைப்பானை வழங்கியுள்ளனா்.
தரம் ஏழு மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் இரண்டு மகன்களுடன் வசித்து வரும் கலையழகனின் மனைவி சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக புலிகள் அமைப்பின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் மாதாந்த சம்பளம் பெறும் ஊழியராக பணிபுரிந்துள்ளார்.
அதற்கான சாட்சிகளாக அவரோடு பணியாற்றிய பலா் இன்றும் கிளிநொச்சியில் உள்ளனா். இந்த நிலையில் அவா் ஏழு வருடங்கள் புலிகள் இயக்கத்தில் இருந்ததாக விசாரிப்பதும் அவரது கணவன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மனைவி தற்போதும் வைத்திருப்பதாக தெரிவித்தும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்படி சம்பவங்கள் தன்னை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது என்றும் தொடா்ந்தும் இவ்வாறு நடந்தால் தானும் தனது இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்வதனை தவிர வேறு வழியில்லை என்றும் கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக