தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி

தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்....
10.10.1987 அன்று யாழ். கோட்டைப் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலில்
வீரவேங்கை அன்ரன்
(இரத்தினம் பரமேஸ்வரன் – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.)
வீரவேங்கை நிமல்
(பொன்னையா பூபாலசிங்கம் – மிருசுவில், யாழ்ப்பாணம்.)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
கோப்பாய் பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது
2ம் லெப்டினன்ட் மாலதி
(சகாயசீலி பேதுறு – ஆட்காட்டிவெளி, மன்னார்)
முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
2ம் லெப்டினன்ட் கஸ்தூரி
(வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
வீரவேங்கை தயா
(செபஸ்ரியான் சலேற்றம்மா – பெரியநாவற்குளம், மன்னார்.)
வீரவேங்கை ரஞ்சி
(யோகம்மா கதிரேசு – ஓமந்தை, வவுனியா.)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்.
பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.
நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
அன்று( 10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.
1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.
புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது
* பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.
வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.
வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.
மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.
எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.
மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.
எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.
உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.
சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.
தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.
அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.
எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.
இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.
எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.
* அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.
* ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.
அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.
* 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.
பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து
மாலதி யென்னும் பெயர்’தனைத் தாங்கித்
தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத்
தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து
பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே
பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
குறும்புத் தனங்கள் குறைவின்றி ஆற்றும்
கொஞ்சும் கிளியாய்க் குலவி நின்றவள்
நிறுவிடத் துடித்தனள் தமிழீழம் தனையே
நெஞ்சினில் நெருப்பினை ஏந்தி நின்றனள்!
இறக்கும் போதிலும் ஆயுதங்கள் தம்மை
இன்னுயிர் அமைப்பிடம் கொடுத்து மறைந்தனள்!
மறக்க வியலா முதற்பெண் புலியாய்
மாவீரர் பெயர்களில் மாண்புற இணைந்தவள்!
அண்ணன் தன்னிடம் ஐயமறக் கற்ற
ஆயுதப் பயிற்சியில் உயரத் திளைத்து
எண்பத் தேழில் ஐப்பசித் திங்கள்
இந்திய இராணுவம் முற்றுகை யிடவே
கண்ணெனத் துமுக்கியைக் கைதனில் ஏந்திக்
களத்தினில் இறங்கிக் கயவர் தம்மைப்
பெண்ணெனும் தெய்வம் புலியாய்ப் பாய்ந்து
பெரிதாய் வீழ்த்தினள் பெரும்படை தனையே!
தமிழீழத் தேசிய விடுதலைப்போ ராட்டத்தின்
தக்கவே முதுகெலும் பெனவே விளங்கும்
அமிழ்தெனத் திகழும் ஆன்றநல் அரிவையர்
அவர்தம் தியாகமும் வீரமும் ஒருங்கே
இமயமென நாமடைந்த வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய் நின்றதை உலகே அறியும்!
சமயத்திற் தன்னுயிர் போக்கியே சகாயசீலி
தமிழ்ப்பெண் போர்ப்பணி தொடர வைத்தனள்!
அடுப்பங் கரைதனில் அகப்பை பிடித்தே
உறங்கிய பெண்தனை உசுப்பி அழைத்து
எடுப்பாய் நிமிர்ந்து ஆயுதம் ஏந்தியே
ஆணுக்கு நிகராய் அவனியிற் றிகழத்
துடிப்புடன் அமைப்பினைத் தொடக்கிய தலைவன்
தூய நெஞ்சினைப் போற்றுதல் முறையே!
அடிப்படை உரிமைகள் மறுத்தோரை எதிர்த்து
அணங்குகள் படையின்று விரட்டுதல் காணீர்!
‘தாயாய்த் தங்கையாய் தாரமாய் தாதியாய்
தரணியிற் சேவைகள் செய்திடப் பிறந்தவள்’
வாயாரப் பேசிய வரட்டு வார்த்தைகளை
வர்ணங்கள் பேசியோர் வஞ்சனைக் குரல்களைத்
தீயார இட்டுமே தீய்ந்திடச் செய்தார்!
தேன்தமிழ்ப் பெண்கள் சிறுமையை எதிர்த்தார்’!
ஓயாத அலைகளில் அவர்தம் ஆற்றலை
உலகம் வியந்தது! எதிரியும் திகைத்தான்.!
பட்டுச் சேலைகள் பலவகை நகைகள்
பகட்டு வாழ்வுகள் பயனற்ற வையெனக்
கட்டுப் பாடுடை வாழ்வுதனைக் கடைப்பிடித்து
‘காண்போம் தமிழீழம்’ என்கின்ற கொள்கையில்
கட்டான மனிதகுல வாழ்வின் விடிவிற்காய்க்
கன்னியராய்த் தனிமனித வாழ்வினை அர்ப்பணித்துச்
சிட்டெனும் சொல்தவிர்’த்துச் சிறுத்தையாய்ச் செயற்படும்
செந்தமிழ்ப் பெண்களின் சிறப்பினைச் செப்பிடுவோம்!
அடிமட்டத் திலிருந்து எழுப்பிய அமைப்பின்று
ஆணித் தரமாய் அகலப் பரந்து
கொடியெனெப் படர்ந்து உயர்’ அரசியலில்
குற்றமில் நீதித் துறையில் நிர்வாகத்தில்
இடியென முழங்கும் ஊடகத் துறையில்
இரக்கம் மிகுநல் மருத்துவப் பிரிவில்
குடிகளின் நலந்தனைக் கருத்திற் கொண்டுமே
கண்ணுறக்க மின்றிக் கடமை செய்கிறதே!
இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு
இறப்பெனும் முடிவினை வாழ்வினில் ஏற்றுப்
பத்தரை மாற்றுத் தங்கமெனத் திகழ்ந்து
பவ்வியமாய் விடுதலைக்கு உரம்தனைக் கொடுத்து
மொத்தத் தமிழினத்தின் மனத்திலும் நிறைந்து
முதலாம் மாவீரப் பெண்ணென அறிந்து
நித்தமும் நெஞ்சினில் நிறை தாமரையாய்
நிறுத்தியே வணங்குவோம் நாளும் வாழ்வில்!
https://youtu.be/JNW0Zl1jE9I
https://youtu.be/LE8kggf085g
https://youtu.be/Sw4IlHGehso
https://youtu.be/Q6cKshYA0r8

0 கருத்துகள்:

கருத்துரையிடுக