முதலமைச்சர் முள்ளிவாய்க்காலில் சுடரேற்றினார் ! - சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ரவிகரன், டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித சாட்சியங்களும் இன்றி கொல்லப்பட்டார்கள். இவ்வாறு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு இலங்கையின் சட்டத்தில் இடமில்லை. உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது. இதனாலேயே சர்வதேச குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த கால யுத்தத்தில் யார்? யார்? கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் இல்லை. இது குறித்து விசாரணை செய்யவேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும். இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த அரசாங்கம் தடுத்த போதிலும், புதிய அரசாங்கம் எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை. அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக தீர்வுகளை புதிய அரசாங்கம் வழங்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக